அட்டோபர் 20 2005
தராசு
வ..வ..வம்பு
உள்ளங்கையில் உலகம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
சிறுகதை
அமெரிக்க மேட்டர்ஸ்
கேள்விக்கென்ன பதில் ?
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

bacchan, navya nairஇரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான ஒரு மனிதனின் பொறுப்பற்ற தன்மையும், அவனால் அவன் குடும்பம் படும் அவஸ்தைகளும், குடும்பத்தினர் அவனைத் திருத்த மேற்கொள்ளும் முயற்சிகளும் தான் படத்தின் கதை. பல குடும்பங்களில் நாம் அடிக்கடி பார்க்கும் விஷயம் தான் இது என்றாலும் கதை என்னவோ நம் வீட்டிலேயே நடப்பதைப் போல அமைந்திருப்பதுதான் படத்தின் சிறப்பு.

தமிழ் ஆசிரியரான தங்கர் பச்சான் அழகான குடும்பத்தின் தலைவர். அன்பான மனைவியாக நவ்யா நாயர் மற்றும் இரண்டு சுட்டிப் பெண் குழந்தைகள். வாத்தியார் வேலை பார்ப்பதைவிட தங்கருக்கு நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு வெட்டி வேலை பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் குடும்பத்தின் நிம்மதியைக் குலைக்கிறது. கணவர் செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு தானே செய்து குடும்ப வண்டியை ஒருமாதிரி ஓட்டுகிறார் நவ்யா. சதா சர்வகாலமும் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு தண்ணி, சீட்டு காப்ரே என்று கெட்டுக் குட்டிச்சுவராகப் போகும் தங்கரைத் திருத்த நினைக்கிறார்கள் அவரது அப்பா பிரமிட் நடராஜனும் மாமனார் சுந்தர்ராஜனும். இதற்கிடையே ஒரு பிரச்சனையில் போலீசிடம் மாட்டும் தங்கரை ஒரு முறையாவது சபரி மலைக்குப் போகவேண்டும் என்று கட்டளையிடுகிறார் இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம். முதலில் போக மறுக்கும் தங்கர் பின்னர் நண்பர்கள் கேலி பேசுவதைக் கேட்டு ரோஷப்பட்டு மலைக்குப் போக சம்மதிக்கிறார்.

மலைக்குப் போய்விட்டு வந்தால் அவரிடம் நல்ல மாற்றம் ஏற்படும் என்று நினைக்கும் குடும்பத்தார் - மலைக்குப் போய் கிட்டதட்ட சாமியாராகவே மாறி வீடுவரும் தங்கரைப் பார்த்து அதிர்கிறார்கள். தங்கரின் இந்த மாறுதலால் இருக்கும் ஆசிரியர் வேலையும் போய்விடுகிறது. அவரைத் திருத்த குடும்பத்தார் படும் கஷடங்கள் எல்லாம் வீணாய் போய்விட, ஒருநாள் பொறுக்க முடியாத நவ்யா ஆத்திரத்தில் சாமியாடிவிடுகிறார். விளைவு ஒருவரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் தங்கர் வீட்டைவிட்டு சென்றுவிடுகிறார். குடும்பத்தை நடத்த சிரமப்படும் நவ்யா மாமனார் தகப்பனாரின் உதவிகளை மறுத்துவிட்டு சொந்தக் காலில் குழந்தைகளை வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் தன்னால் குடும்பத்தைவிட்டு இருக்கமுடியாத நிலையைப் புரிந்துகொள்ளும் தங்கர் சன்யாசி கோலத்தை விட்டுவிட்டு சொந்தங்களைத் தேடி ஊருக்கே வருகிறார். இவரது வருகையால் வெறுப்படையும் சொந்தங்கள் அனைத்தும் மனைவி, தகப்பனார் மாமனார் என்று அனைவரும் அவரை வெறுத்து ஒதுக்க அவர் நிலை கடைசியில் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

thankar navya கதாநாயகனாக தங்கர் பச்சான் - ஓஹோ என்றில்லாவிட்டாலும் ஓக்கேவாக இருக்கிறது அவரது நடிப்பு. சில காட்சிகளில் அவரது நடிப்பும் வசன உச்சரிப்பும் கொஞ்சம் போரடித்தாலும் மொத்தத்தில் இயல்பான நடிப்பு. படத்தில் பாராட்டப்படவேண்டியவர் நவ்யா நாயர். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக - பொறுப்பற்ற கணவனின் மனைவியாக நடிப்பில் அட்டகாசம் செய்திருக்கிறார். கணவன் இதோ திருந்திவிடுவார்.. அதோ திருந்திவிடுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்து ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாமல் வெடிக்கிறாரே.. அப்பா அருமை.. இந்தக் காலத்தில் கதாநாயகிகள் பெரும்பாலும் பாட்டுக்கு மட்டும்தான் பயன்படுவார்கள் என்ற கருத்தை தனது நடிப்பால் தூளாக்கியிருக்கிறார். படத்தை தாங்குவதே இவரது நடிப்புதான் என்றால் மிகையில்லை.

பாராட்டப்படவேண்டியவர்களில் முக்கியமானவர்கள் பிரமிட் நடராஜனும், சுந்தர்ராஜனும். தங்கரைத் திருத்த இவர்கள் படும்பாடும், அவரைத் திருத்தமுடியாததை நினைத்து வேதனைப் படுவதிலும் கடைசியாக தங்கர் மனம் திருந்தி வரும் காட்சிகளில் வயிற்றெரிச்சலோடு கத்தும் போதும் இருவரும் பாராட்டத்தக்க விதத்தில் நடித்திருக்கிறார்கள். காமெடி என்ற பெயரில் டி.பி கஜேந்திரன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் படுத்துகிறார்கள். தங்கரே கதாநாயகன் கம் வில்லனாக இருப்பதால் படத்தில் நோ வில்லன்.

இளையராஜாவின் இசை படத்திற்கு வலிமை சேர்கிறது. கண்ணனின் ஒளிப்பதிவும் ஓக்கே. தரமான மலையாள ரீ-மேக் படம் என்றாலும் படத்திற்கு தேவையே இல்லாத வகையில் வரும் நவ்யா நாயரின் கவர்ச்சி நடனமும், பாரில் ஒரு பெண் ஆடும் காப்ரேவும், படத்தின் கடைசியில் தங்கர் பேசும் திராட்சைபழ வசனமும் எதற்காக? படம் வெற்றியடைய தரமான கதை மட்டும் போதாது என்று தங்கரும் படத்திற்கு படம் நினைக்கிறாரோ என்னவோ? மொத்தத்தில் அப்பாசாமி அப்பாவிசாமியில்லை.

உங்கள் கருத்து  
Murali
10/24/2005 , 3:40:17 PM

 [Comment url]
இது ஒரு மலையாளப் படத்தின் அப்பட்ட காப்பி (ரீமேக்காக இருக்கலாம்). படம் பெயர் மறந்து விட்டது. மலையாள நடிகர் ஸ்ரீநிவாசனும் சங்கீதாவும் நடித்த படம். மிகுந்த வரவேற்பைப் பெற்ற பட்மும் கூட.
   
Mahesh
10/25/2005 , 11:44:54 AM

 [Comment url]
மலையாளப் படத்தின் பெயர் " சிந்தா விஷஷடாயாய ஷ்யாமளா".மலையாளப் நடிகர் ஸ்ரீநிவாசன் நடித்த படம்.
   
Gayathri
10/25/2005 , 2:42:18 PM

 [Comment url]
கதை நன்றாக இருக்கிறது. நவ்யா நாயரின் நடிப்பு அருமை. கதையின் நாயகன் தங்கர்பச்சான் சிறந்த படைப்பாளி, இலக்கியவாதி,ஒளிப்பதிவாளர், சிறந்த இயக்குனரும் கூட. ஆனால் இந்தப் படத்திற்கு கதா நாயகனாக வேறு புதுமுகமோ பழைய முகமோ போட்டு இருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். இயக்குனர்கள் நடிகர்களாக மாறும் நேரம் போல.

காமெடி என்ற பெயரில் கடி. படம் ஒரு முறை பார்க்கலாம். தங்கர்பச்சானின் இயக்கமும் நவ்யா நாயரின் நடிப்பும் அருமை, திரையில் மரத்தை சுத்தி டூயட் பாடவும் கவர்ச்சியை மட்டும் காட்டவும் பயன்படுத்தப்படும் கதை நாயகிகள் மத்தியில் நவ்யா நாயருக்கு சிறப்பான படைப்பு கொடுத்து, நவ்யாவின் நடிப்பு திறமையை வெளிகொணர வாய்ப்பு அளித்த தஙகர்பச்சானுக்கு சபாஷ்.

மீனா, உங்கள் விமர்சனம் அருமை. முன்பு சமையல் குறிப்புகள் எழுதி வந்த நீங்கள் தற்சமயம் ஏன் அதை எழுதுவதில்லை? தங்கள் படைப்புகளை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
   
chithran
10/28/2005 , 1:47:26 AM

 [Comment url]
இந்தப் படம்தான் அந்த படம்.
http://en.wikipedia.org/wiki/Chinthavishtayaya_Shyamala
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |