|
புல்லாங்குழலை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்த நான், மிகவும் பிரபலமான யாரையாவது அதில் எழுத வைக்க வேண்டும் என்று விரும்பினேன். சட்டென என் மனதில் தோன்றியவர் ராஜேஷ்குமார்.
குமுதத்தில் வாரா வாரம் விறு விறு சிறுகதைகள் எழுதுவார். அதிரடித் திருப்பங்களோடு நாவல்கள் எழுதுவார். 40 கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம் இருக்கிறார். அவருடைய பேட்டி எடுத்துப் போட வேண்டும் என்று தீர்மானித்தேன். இது கையெழுத்துப் பத்திரிகை என்பதால் அவருடைய கையெழுத்தையே இதில் இடம் பெற வைக்க வேண்டும் என்ற புதுமையான ஆசையும் எழுந்தது. லே அவுட் போட்டு, பதிலெழுத அவருக்கு இடம் விட்டு பதினைந்து கேள்விகள் எழுதி அனுப்பினேன்.
அவர் பணத்துக்காக எழுதும் எழுத்து வியாபாரி, ஒரே மாதிரி எழுதுவார், அவர் எழுதுவதெல்லாம் கதையா என்று அவரின் பல நல்ல படைப்புகளை படிக்காமலே மேம்போக்காய் விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். ஆனால் அவருடைய பெயரைப் போட்டால் பத்திரிகையின் சர்க்குலேஷன் கணிசமாய் உயரும் என்பது மறுக்க முடியாத உண்மை. லேனா தமிழ்வாணன் பல இடங்களில் இதை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார்.
அப்படிப்பட்டவர் எந்த வணிக நிர்ப்பந்தங்களும் இல்லாமல் ஒரு துக்குளியூண்டு கையெழுத்துப் பத்திரிகைக்கு சிரத்தையாய் உட்கார்ந்து பதில் எழுதி நாலே நாளில் அனுப்பி வைத்தார். எந்த ஒரு வெற்றிக்குப் பின்னாலும் பணம் சம்பாதிக்க வேண்டுமேன்ற குறிக்கோளை விட - தீவிர உழைப்பும், அடங்காத ஆர்வமும், அதீத ஈடுபாடும்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
அவரே கைப்பட பதில் எழுதி வெளியான அந்த புல்லாங்குழல் கையெழுத்துப் பிரதி கை மாறி கை மாறிப் போய்க் கடைசியில் யாரோ ஒருவர் அபேஸ் பண்ணிக் கொண்டார். அந்த இதழ் திரும்பக் கிடைக்கவே இல்லை. ஆனால் அவரிடம் வாங்கிப் போட்ட அந்தப் பேட்டி எனக்குள் சில அதிரடித் திருப்பங்களை உண்டு பண்ணியது. அவரை மாதிரி பிரபல பத்திரிகைகளில் எழுத வேண்டும் என்ற வெறி எனக்குள் மையம் கொண்டது.
அத்தோடு புல்லாங்குழலுக்கு மூடு விழா நடத்தினேன்.
பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளை ஊன்றிப் படித்து நுணுக்கங்களை நானாக அநுமானித்து - சில கதைகள் எழுதி குமுதத்துக்கு அனுப்பினேன். பிரசுரிக்க இயலாமைக்கு வழ வழா தாளில் ஆ·ப்செட்டில் வருந்தி கதை திரும்பி வரும். திரும்பி வந்த கதையை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். இந்தக் கதைகளில் என்ன குறை கண்டது இந்தக் குமுதம்? எனக்குப் புரியவில்லை. எக்ஸ்பர்ட் அட்வைஸ் தேவை என முடிவு பண்ணி, மீண்டும் ராஜேஷ்குமார் சரணம்.
புதிதாய் எழுதின கதை ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்தேன். கூடவே ஒரு கடிதம். " என்னுடைய கதை பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளுக்கு எந்த வகையிலும் குறைந்ததாகப் படவில்லை. இருந்தாலும் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? பத்திரிகை ஆபிசில் தெரிந்தவர்கள் சிபாரிசு பண்ண வேண்டுமா? என்னை மாதிரி ஆளுங்க கதையெல்லாம் போட மாட்டாங்களா? " இப்படி அவரிடம் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு வைத்தேன்.
பேட்டிக்கு நாலு நாளில் பதிலெழுதி அனுப்பின மனிதர் இந்த லெட்டருக்கு ஒரு மாசத்துக்கு மேலாகியும் எந்தப் பதிலும் போடவில்லை. சரி அவ்வளவுதான். இந்தக் கதை கத்தரிக்காயை எல்லாம் மூட்டை கட்டிப் போட்டு விடலாம் என்று சலித்திருந்த போது அவரிடமிருந்து பதில்.
" ஆபிஸ் வேலையாக பம்பாய் சென்று விட்டதால் உடனே பதில் எழுத முடியவில்லை. உங்கள் கதை படித்தேன். நன்றாக உள்ளது. சாவி பத்திரிகைக்கு அனுப்பி வையுங்கள். நிச்சயம் பிரசுரம் ஆகும். நேரில் வாருங்களேன். நிறைய பேசலாம். "
|